

சென்னை: சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, அடையார், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்க மாநகராட்சி சார்பில் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், குப்பை அள்ளும் பணியை தனியாருக்குக் கொடுத்து, அரசு வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது. என்யுஎல்எம் தொழிலாளர்களுக்கு மாநகராட்சி நேரடியாக வேலை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும்.
10 ஆண்டுகள் பணிபுரியும் என்யுஎல்எம், தொகுப்பூதிய பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள், அம்மா உணவக தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரை செங்கொடி சங்கத்தினர் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காத நிலையில், சிஐடியு பொதுச் செயலாளர் கண்ணன் தலைமையில் மாநகராட்சி செங்கொடி சங்கத் தொழிலாளர்கள் 600-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ரிப்பன் மாளிகை முன்பு கூடினர். அவர்கள் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட முயன்ற நிலையில், அங்கு பலத்த போலீஸார் குவிக்கப்பட்டு, ரிப்பன் மாளிகை வாயில்களைப் பூட்டி தடுப்பு வேலிகள் அமைத்தனர்.
பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் ரிப்பன் மாளிகை எதிரே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் ராஜா முத்தையா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டோரைக் கைது செய்து அப்புறப்படுத்திய போலீஸார், திருமண மண்டபம் ஒன்றில் நேற்று மாலை வரை அடைத்து வைத்து, பின்னர் விடுவித்தனர். இந்த மறியலில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.மகேந்திரன், செங்கொடி சங்க பொதுச்செயலாளர் பி.சீனிவாசலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.