தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை: ராமேசுவரத்தில் இன்று வேலைநிறுத்தம்

இலங்கை கடற்பைடயினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர்.
இலங்கை கடற்பைடயினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர்.
Updated on
2 min read

ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் 2 விசைப்படகுகளை நேற்று சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர் 15 மீனவர்களை கைது செய்தனர். இதைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 500 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பிரியன் ரோஸ், கீரின்ஸ் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாகக் கூறி பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து படகில் இருந்த பிரியன் ரோஸ், ஜார்ஜ், அந்தோணி, பிரதீபன், ஈஷாக், ஜான், ஜனகர், கிறிஸ்து, ஆரோக்கியராஜ், ஜெர்மஸ், ஆரோக்கியம், ரமேஷ், ஜெகன், பிரபு, மெல்டன் ஆகிய 15 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் மீனவர் சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மீனவர்கள் சிறைப்பிடிப்பை கண்டித்தும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று (ஜூலை 10) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்தனர்.

இதற்கிடையே இலங்கை கடற்படையினர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2023 ஜனவரியிலிருந்து இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பில் ஈடுபட்ட 12 தமிழக விசைப்படகுகளை பறிமுதல் செய்து 74 மீனவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி வலியுறுத்தல்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை ஆகும். இது தொடர்பாக இந்திய - இலங்கை அரசு அதிகாரிகள் மற்றும் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணவும், இலங்கைப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்யவும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in