

சென்னையில் தடையில்லா மின்சாரம் கிடைக்க 68 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் தெரிவித் துள்ளார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத் தின்போது உறுப்பினர் அசோக் (அதிமுக) ‘‘வேளச்சேரி தரமணி யில் புதிதாக 33 கிலோவாட் துணை மின் நிலையம் அமைக்க அரசு முன்வருமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியதாவது:
சென்னை நகரில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க ஒட்டு மொத்தமாக தற்போது 41 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இதில் 4 துணை மின் நிலையங்களில் பணிகள் முடிந்துள்ளன. இது தவிர 5 ஆண்டுகளில் திருத்தி அமைக்கப்பட்ட விரிவு படுத்தப்பட்ட மின் மேம்பாடு சீரமைப்பு திட்டத்தின்கீழ் 27 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 3 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தடையில்லா மின்சாரம்
மொத்தம் அமைக்கப்பட வேண்டிய 68 துணை மின் நிலையங்களில் 7 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் மாதத்துக்குள் 24 துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவு பெறும். அனைத்து துணை மின் நிலையங்களும் அமைக்கப்பட்ட பின் சென்னை நகரில் மின்சாரம் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். தடையில்லா மின்சாரம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.