

ஈரோடு, பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசன அமைப்பின்கீழ் உள்ள நிலங்களுக்கு முதல் போக சாகுபடிக்காக நாளை மறு நாள் முதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசன அமைப்பின்கீழ் முதல் போகப் பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி, வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருங்குடிமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசன அமைப்பின்கீழ் உள்ள நிலங்களுக்கு முதல் போக சாகுபடிக்காக 21.7.2014 முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் வாய்க்கால் பாசன அமைப்பின்கீழ் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.