எனது உயிருக்கு அச்சுறுத்தல்: எம்.ஏ.எம். ராமசாமி போலீஸில் புகார்

எனது உயிருக்கு அச்சுறுத்தல்: எம்.ஏ.எம். ராமசாமி போலீஸில் புகார்
Updated on
1 min read

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமி, போலீஸில் புகார் அளித்துள்ளார்.

செட்டிநாடு குழும நிறுவனங்களின் தலைவரும், அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் இணைவேந்தருமான எம்.ஏ.எம். ராமசாமி, சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 23-ம் தேதி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது வீட்டில் எனக்கே தெரியாமல் சில விஷயங்கள் அரங்கேறி வருவது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது. என் வீட்டில் யாரோ கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளனர். எனது வீட்டைச் சுற்றி திடீரென 20 தனியார் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு புகாரில் எம்.ஏ.எம்.ராமசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, எம்.ஏ.எம்.ராமசாமியின் பாதுகாப்புக்காக ஆட்களை நியமித்துள்ளதாக அவரது வீட்டில் உள்ள நெருங்கிய உறவினர் ஒருவரே கூறியுள்ளார். ஆனால், தனக்கு தனியார் பாதுகாப்பு எதுவும் வேண்டாம் என ராமசாமி கூறியதாக தெரிகிறது. கடந்த மாத இறுதியில் எம்.ஏ.எம்.ராமசாமி அளித்திருந்த ஒரு புகாரில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கேட்டிருந்ததாக தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in