

ஆவடி: ஆவடி அருகே சாலை விபத்தில் மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தை மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள பாலவேடு- காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குப்பன் (72). இவரது மகன் அசோக்குமார் (49).இவர் சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அசோக்குமாருக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், அசோக்குமார் கடந்த 2-ம் தேதி மோட்டார் சைக்கிளில் தன் நண்பரை சந்திப்பதற்காக திருநின்றவூர் அருகே உள்ள பாக்கத்துக்கு சென்றார். அப்போது, பாக்கம் பகுதியில் பின்னால் அதிவேகமாக வந்த கார், மோதியதில், படுகாயமடைந்த அசோக்குமார், பொதுமக்களால் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்றார். பிறகு, அவர், கடந்த 3-ம் தேதிமேல் சிகிச்சைக்காக சென்னைராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரான வெங்கலை அடுத்த அமணம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கரனை போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே, அசோக்குமார் உயிரிழந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த, அவரின் தந்தை குப்பன் நேற்று முன்தினம் மதியம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தந்தையும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ஆவடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.