

சென்னை: கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு குழு அமைத்து ஆராய்ந்து தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரஷர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 26.6.2023 முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்நிறுத்தி காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
3.7.2023 அன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், இயற்கை வளங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, மற்றும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் நிர்மல்ராஜ், ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு குழு அமைத்து ஆராய்ந்து தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக முடிவெடுத்து, 4.7.2023 செவ்வாய்கிழமை முதல் தமிழகத்திலுள்ள அனைத்து கல்குவாரி மற்றும் கிரஷர்களும் இயங்கும் என்று அறிவித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.