

சென்னை: தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பூர் - வஞ்சிபாளையம் இடையே கடந்த 2-ம் தேதி ரயில் தண்டவாளத்தில் இருவர் மதுபோதையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது, பிளாஸ்பூர் விரைவு ரயிலில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடந்த மார்ச் 13-ம் தேதி வாழப்பாடி - ஏத்தாப்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர், ரயிலில் அடிபட்டு இறந்தார். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
தண்டவாளங்கள் ரயில்கள் செல்வதற்கு மட்டுமே. தண்டவாளத்தைகடந்து செல்வது ரயில்வே சட்டம் 147-ன்படி குற்றமாகும். ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்வது, விளையாடுவது, விளம்பர மோகத்தில் செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களால் பலர் உயிரை இழக்க நேரிகிறது. எனவே, இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.