தீட்சிதர் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக பாஜக மாநில செயலாளர் உள்ளிட்ட இருவருக்கு சிதம்பரம் போலீஸ் சம்மன்

தீட்சிதர் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக பாஜக மாநில செயலாளர் உள்ளிட்ட இருவருக்கு சிதம்பரம் போலீஸ் சம்மன்
Updated on
1 min read

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் ஒருவர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களால் தாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட இருவர் விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் சம்மன் அனுப்பியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபையில் பக்தர்களை வழிபட அனுமதிக்கும் விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அங்கு பூஜை நடத்திய தீட்சிதர் ஒருவரைத் தாக்கி பூணூலை அறுத்ததாக ‘தி கம்யூன்’ என்ற ட்விட்டர் பக்கம் மற்றும் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிடப்பட்டிருந்தது.

இதைப் பார்த்து சிதம்பரம் பகுதியில் பலரும் உண்மையாக நடந்தது என நம்பி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டதாகவும், இரு பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்படும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையில் இந்த கருத்து போடப்பட்டுள்ளதாகவும் சிதம்பரம் நகர கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கடந்த 28-ம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீஸார் கடந்த 29-ம் தேதி வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த வழக்கு விவகாரம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் பாஜக மாநில செயலாளரான எஸ்.ஜி.சூர்யா மற்றும் அவருடன் குறிப்பிட்ட சமூக வலைதளத்தை பயன்படுத்தி வரும் கவுஷிக் சுப்ரமணியன் ஆகிய இருவருக்கும் சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.ஆறுமுகம் சம்மன் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், இன்று (ஜூலை 4) சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள எஸ் ஜி.சூர்யாவின் இல்லத்தில் இந்த நோட்டீஸ் காவல்துறையினரால் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in