விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜி தம்பிக்கு வருமான வரித் துறை 3-வது முறையாக சம்மன்

விசாரணைக்கு ஆஜராக செந்தில் பாலாஜி தம்பிக்கு வருமான வரித் துறை 3-வது முறையாக சம்மன்
Updated on
1 min read

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை விசாரணைக்கு ஆஜராகுமாறு 3-வது முறையாக வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

சென்னை, கரூர், ஈரோடு, கோவையில் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.

அதேபோல், செந்தில் பாலாஜிவீட்டில் கடந்த 13-ம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆனால், செந்தில் பாலாஜிக்குதிடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.

இதனால், ஏற்கெனவே 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், மீண்டும் அமலாக்கத்துறை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், பல்வேறு பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அசோக்குமாரிடம் விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் ஏற்கெனவே 2 முறை சம்மன் அனுப்பியிருந்தனர்.

ஆனால் இந்த சம்மனை ஏற்ற அசோக்குமார், இரு முறையும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், ஜூலை 27-ம் தேதிவிசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அசோக்குமாருக்கு 3-வது முறையாக வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பிஉள்ளனர்.

இந்த சம்மனுக்கும் அவர் ஆஜராகவில்லை எனில், நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in