

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் கரையில் விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு அமைந்துள்ளது. இது இரும்புக் காலம் முதல் வரலாற்று தொடக்கக் காலம் வரையிலான வாழ்விடப் பகுதி.
2 ஆயிரம் பொருட்கள்: இங்கு, தொல்லியல் மேடு என அழைக்கப்படும் 25 ஏக்கர் பரப்பளவில் முதல்கட்ட அகழாய்வுப் பணி 2021-ல் தொடங்கப்பட்டது. அதில், 3,500-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது, கருப்பு, சிவப்பு நிறம்கொண்ட சுடுமண்பானை ஓடுகள், சுடுமண் சட்டிகள், அழகிய வேலைப்பாடுகளுடன்கூடிய அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தொடர்ந்து ஏராளமான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலர்கள் கூறும்போது, `தற்போது கிடைத்துள்ள சுடுமண் பானை ஓடுகள் மற்றும் அகல் விளக்குகள் மூலம் பண்டைய காலத்தில் வாழ்ந்த முன்னோர்களின் நாகரிகத்தையும், வாழ்க்கை முறையையும் அறிய முடிகிறது' என்று குறிப்பிட்டனர்.