

சென்னை: தமிழகத்தில்தான் சனாதன தர்மம் உருவானது என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நெறியில் வந்த தமிழகத்துக்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்துக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என்று திமுக எம்.பி கனிமொழி பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நெறியில் வந்த தமிழகத்துக்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்துக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது. அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளைத் தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை.
தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை.நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி, சிறிது நேரம் அமைதி காக்கவும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் நடந்த ஸ்ரீராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்வில் சனிக்கிழமை கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "நீங்கள் பலவீனமாக இருந்தால் எதிரிகளால் சூழப்பட்டடிருப்பீர்கள். பலமானவர்களாக இருந்தால் நண்பர்கள் இருப்பார்கள்" என்று பேசினார். குறிப்பாக, தமிழகத்தில்தான் சனாதன தர்மம் உருவானதாக பல கருத்துகளை முன்வைத்தார். | விரிவாக வாசிக்க > “நீங்கள் பலவீனமாக இருந்தால்...” - தமிழகத்தில்தான் சனாதன தர்மம் உருவானதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு