வழிப்பறி வழக்கில் நீக்கம்: பெண் காவல் ஆய்வாளரை மீண்டும் பணியில் சேர்க்க உயர் நீதிமன்றம் மறுப்பு

வழிப்பறி வழக்கில் நீக்கம்: பெண் காவல் ஆய்வாளரை மீண்டும் பணியில் சேர்க்க உயர் நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

மதுரை: வழிப்பறி வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளரை மீண்டும் பணியில் சேர்க்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் வசந்தி. ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த பேக் டெய்லரிடம் ரூ.10 டெய்லரிடம் பறித்த வழக்கில் வசந்தியை போலீஸார் கைது செய்தனர். பின்னர் வசந்தி பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி வசந்தி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், 'நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளராக பணிபுரிந்தபோது கடந்த 5.7.2021-ல் சிலர் கள்ள நோட்டுகளை மாற்றுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தேன். இதனால் ரூ.10 லட்சம் பறித்ததாக எனக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து என்னை கைது செய்தனர். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் நிபந்தனைபடி என்னால் மதுரையை விட்டு வெளியேற முடியவில்லை. இதனால் என்னால் விருதுநகரில் நடைபெற்ற விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. இருப்பினும் என் மீதான குற்றச்சாட்களுக்கு உரிய விளக்கம் அனுப்பினேன்.

இந்நிலையில், என்னை பணியிலிருந்து நீக்கி மதுரை சரக டிஜஜி 11.4.2023-ல் உத்தரவிட்டார். என்னை பணி நீக்கம் செய்வதற்கு முன்பு எனக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் எனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்து என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: ''மனுதாரர் மீது 2 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மனுதாரர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதியில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in