Last Updated : 21 Jul, 2014 10:00 AM

 

Published : 21 Jul 2014 10:00 AM
Last Updated : 21 Jul 2014 10:00 AM

அருகிலேயே இருக்கும் அழகிய சுற்றுலா தலம்: பஞ்சபாண்டவர் மலை குறித்து சமூக ஆர்வலர்கள் தகவல்

மதுரை அருகிலேயே அழகிய சுற்றுலாத் தலமாக பஞ்சபாண்டவர் மலை இருந்து வருவதாக குறிஞ்சிக்கூடல் அமைப்பினர் தெரிவித்தனர்.

மதுரை குறிஞ்சிக்கூடல் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம் கீழவளவு கிராமத்தில் உள்ள பஞ்சபாண்டவர் படுக்கையில் வரலாற்று நடைபயணம் சென்றனர். மலையில் ஏறிய சிறிது தூரத்தில் சமணர்கள் வாழ்ந்த இடங்கள் உள்ளன. அந்த இடத்தில் உள்ள பாறையின் முன்புறத்தில் 3 சமண சிற்பங்கள் உள்ளன. அதன்முன் இரு தூண்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதுபோல, பாறையின் கிழக்கு பகுதியில் 6 சிற்பங்கள் உள்ளன.

50 சமண படுக்கைகள்

மேலும், பாறையின் அடிப்பகுதியில் சுமார் 50 சமண படுக்கைகள் உள்ளன. மதுரையை சுற்றியுள்ள சமண மலைகளில் அதிகமான படுக்கைகள் உள்ள இடம் இதுவாகத்தான் இருக்கும். இந்த இடத்தில் சுமார் 100 பேர் வரை தங்கலாம். தங்கியிருக்கும் இடங்களில் மழைநீர் புகாத வகையில் காடி எனப்படும் சிறிய அளவிலான வாய்க்கால்கள் வெட்டப்பட்டுள்ளன. பாறையின் மேல்பகுதியிலும் தண்ணீர் செல்வதற்கான வழிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் களுக்கு மதுரை தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குநர் கணேசன் விளக்கமளித்தார். அவர் கூறும்போது, இந்த பாறையில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி வகையைச் சார்ந்தவை. இவை வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளன. பாறையில் உபாசன் தொண்டிலன் கொடு(ப்பி)ட்ட பாளி என்று எழுதப்பட்டுள்ளது. தொண்டியை சேர்ந்த உபாசன் என்பவர் சமணர்கள் தங்குவதற்கான படுக்கைகள் செய்து கொடுத்துள்ளார் என்பதை இந்த எழுத்துக்கள் குறிக்கின்றன.

எழுத்துகள் அமைப்பு

பாலி மொழியில் உபாசன் என்ற சொல்லுக்கு உஜ்ஜாயினி என்று பொருள். அதாவது உஜ்ஜாயினி என்பது சமய போதகர்களை குறிக்கும் சொல்லாகும். எனவே, இங்கு தங்கியிருந்தவர்களில் பாலி மொழி தெரிந்தவரும் இருந்ததற்கான வாய்ப்புகள் உள்ளன. இங்குள்ள எழுத்துக்கள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளன. பாறைகளின் முன்புறமும், பின்புறமும் செதுக்கப்பட்டுள்ள மகாவீரர் சிற்பங்கள் முதலாம் பாண்டிய மன்னர்கள் இருந்த கி.பி 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

இங்கு வாழ்ந்த சமண துறவிகள் கல்வி, மருத்துவம் செய்தும், போதனைகள் செய்தும் வாழ்ந்து வந்துள்ளனர். அதுபோல, உபாசன் என்ற சொல் மதுரையில் உள்ள கொங்கர் புளியங்குளம், திருவாதவூர் உள்ளிட்ட இடங் களிலும் காணப்படுகின்றன என்றார்.

வழக்கறிஞர்கள் கனகவேல், ராஜேந்திரன், நாராயணன், பானுமதி, வரலாற்று ஆய்வாளர் திவ்யா மற்றும் சிறுவர்கள், மாணவர்கள் சுமார் 60 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர் கனகவேல் கூறும்போது, மதுரைக்கு அருகிலேயே மிக அழகான சுற்றுலாத் தலமாக பஞ்சபாண்டவர் மலை திகழ்ந்து வருகிறது. தற்போது மலைக்கு வந்தது மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல, மதுரையை சுற்றி பல சமண மலைகள் உள்ளன. ஆனால், இதுபோன்ற இடங்களுக்கு பலர் வராத காரணத்தால் இதன் தொன்மை அழியும் நிலையில் உள்ளது. எனவே, இதன் தொன்மை மற்றும் பழைமை மாறாமல் இவற்றைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x