திருப்பரங்குன்றம் மலையில் தொழுகைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

படம்: ஜெ.மனோகரன்
படம்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ராமலிங்கம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: "திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் உள்ளது. மலைக்கு செல்லும் பாதையில் நெல்லித்தோப்பு பகுதியில் ரம்ஜான் மாதங்களில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர்.

இதனால் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் தர்கா உள்ளது. அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நேரத்தில் தொழுகைக்கு தடை விதிக்க முடியாது. மனு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டதுடன், விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in