மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

மதுரை: மாமன்னன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். கடைசியாக இவர் எடுத்த கர்ணன் படம் கொடியன்குளம் கிராமத்தில் நடைபெற்ற ஜாதி கலவர சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் ஜூலை 29ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனுடைய பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஆகியவை இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனையை காட்டும் விதமாகவே அமைந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காத்தப்ப புலிதேவன் என்பவரை மாமன்னன் என அழைப்பார்கள். அவரை தவறாக சித்தரிக்கும் வண்ணம் இப்படம் அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள உதயநிதி, தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உள்ளார். உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் நடித்துள்ளார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 173 (ஏ) க்கு எதிராக உள்ளது.

இப்படம் வெளிவந்தால் இரு வேறு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, 29.06.2023 அன்று மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், இப்படத்தை திரையிலோ, எந்த ஓடிடி தளம் போன்ற வேறு ஏதேனும் தளத்திலோ ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்குமாறு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி முன்பு மனுதாரர் தரப்பில் இன்று முறையீடு செய்யப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், மாமன்னன் திரைப்படம் வெளியானால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ”இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய தேவையில்லை. திரைப்படத்துக்கு திரைப்பட தணிக்கை துறை அனுமதி வழங்கிய பிறகு நீதிமன்றம் தலையிட முடியாது, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையினர் பார்த்து கொள்வார்கள். திரைப்படம் மக்கள் பார்க்கவே. இரண்டு நாட்களில் அதனை மறந்து விடுவார்கள். பேச்சு உரிமை கருத்து உரிமை அனைவருக்கும் உள்ளது” எனத் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in