‘இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி’ அறிவிப்பு பலகை அகற்றம் - பழநியில் இந்து அமைப்பினர் போராட்டம்

‘இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி’ அறிவிப்பு பலகை அகற்றம் - பழநியில் இந்து அமைப்பினர் போராட்டம்
Updated on
1 min read

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை நேற்று கோயில் நிர்வாகம் அகற்றியதைக் கண்டித்து இந்து அமைப்பினர் வின்ச் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் படிப் பாதையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், படிப்பாதையில் சூடம் ஏற்றக்கூடாது, கோயில் வளாகத்தில் டிரம்செட் அடிக்கக் கூடாது, கைலி அணிந்து வரக் கூடாது என்று குறிப்பிட்டு அறிவிப்பு பலகை வைக் கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாற்று மதத்தைச் சேர்ந்த சிலர் வின்ச் ரயில் மூலம் மலைக்கோயிலுக்கு செல்ல முயற்சித்தனர். அவர்களை கோயில் பணியாளர்கள் திருப்பி அனுப்பினர். இதையடுத்து, பழநி கோயில் நிர்வாகம் சார்பில் வின்ச் ரயில் நிலையம் பகுதியில் இந்துக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப் படுவர் என்று குறிப்பிட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

அந்த அறிவிப்பு பலகையை நேற்று திடீரென கோயில் நிர்வாகம் அகற்றியது. இதைக் கண்டித்து இந்து அமைப்பினர் வின்ச் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அகற்றிய அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். கோயில் பணியாளர்கள், போலீ ஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அதை ஏற்காமல் இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in