

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வெற்றி பெற வாழ்த்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டினை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், "வருமுன் காப்போம் திட்டத்தை வகுத்தளித்த கருணாநிதியின் நூற்றாண்டினை முன்னிட்டு, மக்கள் நல்வாழ்வுத் துறையின் மற்றுமொரு முன்னோடி முயற்சியாக, தமிழகம் முழுவதும் 103 பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வழக்கமான மருத்துவ ஆலோசனைகளோடு, சிறப்புப் பிரிவு மருத்துவர்களைக் கொண்டு, தொற்று நோய்களையும் தொற்றா நோய்களையும் உடனடியாகக் கண்டறியக்கூடிய பரிசோதனைகளையும் மேற்கொள்ளக் கூடிய வகையில் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஏழை - எளிய நோயாளிகளுக்குப் பயனளிக்கக் கூடிய வகையில், அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து நடத்தும் இந்த முகாம்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இந்தப் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் அமைச்சர்கள் – மருத்துவர்கள் – செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!" என்று அதில் கூறியுள்ளார்.