Published : 30 Oct 2017 08:27 PM
Last Updated : 30 Oct 2017 08:27 PM

கிரானைட் முறைகேடு தொடர்பான சகாயம் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்க வேண்டும்: முத்தரசன்

கிரானைட் முறைகேடு தொடர்பான சகாயம் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் அமைத்த சகாயம் ஐஏஎஸ் விசாரணைக் குழு அரசின் ஒத்துழைப்பு இன்றி, கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரித்து விரிவான அறிக்கையினை அளித்துள்ளது. இதன் மீதான பதில் மனுவை தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இதில் விசாரணைக்குழு அளித்துள்ள 212 பரிந்துரைகளில் 131 பரிந்துரைகள் மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் மற்றவை சட்டத்திற்கு புறம்பாக உள்ளது என்பதால் ஏற்க இயலாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மணல், கிரானைட், தாதுமணல் என இயற்கை வளச் செல்வங்கள் ஆட்சியாளர்களின் உதவியோடு கொள்ளையடிக்கப்பட்டது ரகசியமான ஒன்றல்ல, சட்ட விரோதச் செயலை துணிச்சலாக தடுத்திட முனைந்த வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் தாக்கப்பட்ட கொடூர சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ 1.11 லட்சம் கோடி மதிப்புள்ள கிரானைட் கொள்ளை நடந்துள்ளது என்று சகாயம் விசாரணைக் குழு கூறியுள்ளது. முறைகேடுகள் குறித்து முழுமையான உண்மைகள் வெளிவரவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரின் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கிரானைட் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை மத்திய புலானாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இதனை அதிமுக அரசு ஏற்க மறுத்துள்ளது.

இயற்கை வளங்களை பாதுகாக்க இதுவரை நடப்பில் உள்ள சட்டங்களில் போதாமை இருக்குமானால், அவைகளை பொருத்தமாக திருத்தி வலுப்படுத்த வேண்டியது அரசின் கடமைப் பொறுப்பாகும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அரசு சட்டத்தின் சந்து, பொந்துகளில் குற்றவாளிகள் தப்பித்துச் செல்ல அனுமதித்திருக்கிறது. இது அரசின் நேர்மையான செயலாகாது.

சகாயம் விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை முழுவதுமாக தமிழக அரசு ஏற்று செயல்படுத்தவும், நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வழக்கின் மூலம் எதிர்காலத்தில் இயற்கை வளங்கள் பாதுகாக்கும் வழிவகைகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறது. தமிழக அரசும் தனது நிலையை மறுபரிசீலனை செய்து சகாயம் விசாரணைக் குழு பரிந்துரைகளை முழுமையாக ஏற்க வேண்டும்'' என முத்தரசன் கூறியுள்ளார்.    

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x