செந்தில் பாலாஜியின் சகோதரர் அமலாக்க துறையில் ஆஜராகவில்லை

செந்தில் பாலாஜியின் சகோதரர் அமலாக்க துறையில் ஆஜராகவில்லை
Updated on
1 min read

சென்னை: சட்டவிரோத பண பரிவர்த்தனை விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் நேரில் ஆஜராகவில்லை.

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடர்பாக கடந்த 13-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிமற்றும் அவரது தம்பி அசோக்குமார் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

இதற்கிடையே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நிலையைக் கருத்தில்கொண்டு அமலாக்கத்துறை இதுவரை அவரிடம் விசாரணையை தொடங்கவில்லை.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் விசாரிக்க, 20-ம் தேதி(நேற்று) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறை அண்மையில் சம்மன் அனுப்பி இருந்தது. அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளின் பட்டியலுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாராக இருந்தனர். ஆனால், அசோக்குமார் நேரில் ஆஜராகவில்லை.

விசாரணைக்கு ஆஜராகத் தேவையான ஆவணங்களை திரட்ட வேண்டி இருப்பதால் வேறு ஒரு நாளில் ஆஜராகிறேன் என அசோக்குமார் தரப்பில் அமலாக்கத்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேரில் ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு அசோக்குமார் அளிக்கும் தகவல் அடிப்படையிலேயே அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in