

கடலூர்: கடலூர் அருகே மேல்பட்டாம் பாக்கத்தில் 2 தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரத்தம் தேவை என்று அறிவிக்கப்பட்டவுடன் தன்னார்வலர்கள் மருத்துவமனையில் குவிந்து ரத்த தானம் செய்தனர்.
கடலூர் அருகே மேல்பட்டாம்பாக்கத்தில் நேற்று முன்தினம் காலை தனியார் பேருந்துகள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 95-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் பலர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது என்று பல்வேறு நல அமைப்புகள் அறிவிப்புகளை வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து நூற்றுக் கணக்காக தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மாலை வரை ரத்தம் பெறப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு தேவையான ரத்தம் கிடைக்கப் பெற்றதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. ஆனால் ரத்தக் கொடையாளர்களோ தொடர்ந்து நாளை, மறுநாள் வேண்டுமானாலும் ரத்த தானம் செய்ய தயாராக இருக்கிறோம் என்று தங்களது பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்துவிட்டு சென்றனர்.
இது மருத்துவமனை ஊழியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 200 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளது என்றும், சுமார் 230 பேர் ரத்தம் தானம் செய்ய பதிவு செய்துவிட்டு சென்றுள்ளனர் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.