Published : 21 Jun 2023 04:10 AM
Last Updated : 21 Jun 2023 04:10 AM
விருதுநகர்: காரியாபட்டி அருகே ஊராட்சித் தலைவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள கிழவனேரி கிராம ஊராட்சித் தலைவர் கார்த்திக் (31). இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர். காரியாபட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஊராட்சித் தலைவர் கார்த்திக்குக்கு தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கார்த்திக் நேற்று முன்தினம் பிற்பகல் பாண்டியன் நகரில் உள்ள அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வீட்டில் அறைக்குள் சென்று கார்த்திக் கதவைப் பூட்டி கொண்டதாகக் கூறப்படுகிறது. வெகு நேரமாகியும் அறைக் கதவை திறக்காததால் அந்த பெண், கார்த்திக்கின் நண்பர்களை தொலைபேசியில் அழைத்து விவரத்தை கூறினார். சிறிது நேரத்தில் அங்கு வந்த கார்த்திக்கின் நண்பர்கள் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சேலையால் தூக்கிட்ட நிலையில் கார்த்திக் மயங்கி கிடந்தார்.
உடனே அவரை மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே கார்த்திக் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மறியலில் ஈடுபட்டனர்.
அதையடுத்து கார்த்திக்கின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று காலை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே, விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பும் அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி பவித்ரா மற்றும் போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது ஒரு பெண்ணின் வீட்டில் அவர் இறந்து கிடந்ததால் அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, அப்போது தான் சடலத்தை பெற்றுக் கொள்வோம் என, அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கூறி விட்டு திரும்பிச் சென்றனர். இது குறித்து காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT