Published : 04 Oct 2017 11:41 AM
Last Updated : 04 Oct 2017 11:41 AM

திண்டுக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் பரவுவதால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன. காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவத் துறையினர் பங்களிப்புடன் பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வறட்சியின்போதும் காய்ச்சல் பாதிப்பு, தற்போது மழை பெய்து ஓரளவு தண்ணீர் பிரச்சினை இன்றி உள்ளபோதும் காய்ச்சல் பாதிப்பு என ஆறு மாதங்களுக்கு மேலாகவே மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இந்த ஆண்டு காய்ச்சலால் அதிகம் பாதிப்புக்குள்ளான பகுதி பழநி தான்.

பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் மழைக்காலம் தொடங்கும் முன் மாவட்டத்தில் வறட்சி நிலவியபோதே சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் அசுத்தமான தண்ணீரை பயன்படுத்தியதால் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சல் என சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிலர் உயிரிழந்தனர். கடந்த ஆறு மாதங்களில் காய்ச்சல் பாதிப்பால் பழநி பகுதியில் மட்டும் 13 பேர் பலியாகி உள்ளனர். இதில் மாணவ, மாணவிகளும் அடங்குவர் என்பதுதான் வேதனையான விஷயம்.

தொடரும் உயிர் பலி

இந்நிலையில், தற்போது மழைக்காலம் தொடங்கிய பிறகு போதுமான அளவு தண்ணீர் கிடைத்தபோதும் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீர், இருப்பிடங்கள், பொது இடங்கள் தூய்மையாக இல்லாதது ஆகிய காரணங்களால் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் பரவி வருகிறது.

கடந்த இரு வாரங்களில் மட்டும் காய்ச்சலுக்கு மாவட்டத்தில் திண்டுக்கல், வேடசந்தூர், தொட்டனம்பட்டி, கொடைரோடு, நெய்க்காரப்பட்டி என எட்டு பேர் பலியாகி உள்ளனர். இதில் பெரும்பாலோனோர் மாணவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

சிகிச்சைக்கு வருபவர்கள்

அதிகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சைபெற வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 2,500 பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுவர். இந்நிலையில், சில நாட்களாக இந்த எண்ணிக்கை 3500-க்கும் மேல் அதிகரித்துள்ளது. அனைவரும் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வருபவர்கள். மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என தனி வார்டு உருவாக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின்

பங்களிப்பு அவசியம்

அரசு மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே உடல் பாதிப்புக்குள்ளானவர்கள் காய்ச்சல் ஏற்பட்டவுடன் எதிர்ப்பு சக்தி இல்லாததால் நோய் முற்றி உயிரிழப்பு வரை ஏற்பட்டு விடுகிறது. குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். வீடு மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம் காய்ச்சலை தவிர்க்க முடியும். சுகாதாரம் காப்பதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம். காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் டாக்டர்களின் பங்கு மட்டும் இல்லை. பொதுமக்களின் பங்களிப்பும் உள்ளது. இதை அறிந்து செயல்படவேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x