Published : 27 Oct 2017 08:10 AM
Last Updated : 27 Oct 2017 08:10 AM
திரைப்படங்களில் நாட்டை சிறுமைப்படுத்தும் வசனங்களை தவிர்க்க வேண்டும் என தமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாஜக தலைவர்களின் எதிர்ப்பால் நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்துக்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் கிடைத்துள்ளது. இதற்காக பாஜகவுக்கு படத்தின் தயாரிப்பாளர் நன்றி தெரிவிக்க வேண்டும். ‘மெர்சல்’ படத்தில் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி போன்ற மத்திய அரசின் திட்டங்கள் விமர்சிக்கப்பட்டிருப்பதை எதிர்ப்பது தேவையற்றது. அரசின் திட்டங்கள், கொள்கைகளை எதிர்க்க அனைவருக்கும் உரிமை உள்ளது.
ஆனால், 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை 57 லட்சம் மக்கள்தொகை கொண்ட சிங்கப்பூருடன் ஒப்பிடும் வசனங்களை தவிர்த்திருக்கலாம். சிங்கப்பூரில் இலவச மருத்துவம் கிடையாது. இந்தியாவில் மன்னர் ஆட்சிக் காலத்தில்தான் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இலவச கல்வியும், இலவச மருத்துவமும் உள்ளது.
ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை, 6 முதல் 14 வயதுக்குப்பட்ட குழந்தை களுக்கு கட்டாய இலவசக் கல்வி, உணவு உத்தரவாத சட்டம் ஆகியவை மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. திரைப்படத்தில் என்ன வசனம் வர வேண்டும் என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கக் கூடாது. அதே நேரத்தில் நாட்டை சிறுமைப்படுத்தும் வசனங்களை தவிர்க்க வேண்டும். அப்படி வசனம் வந்தால் நடிகர்கள் மறுக்கவேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT