உலக தந்தையர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

உலக தந்தையர் தினம்: தலைவர்கள் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: உலக தந்தையர் தினம் ஜூன் மாதத்தின் 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உங்களால் கருவானேன். உங்களால் செதுக்கப்பட்டேன். நீங்கள் காட்டிய பாதையிலேயே பயணிக்கிறேன். உம்மை மனதில் நினைத்தே நித்தமும் செயல்படுகிறேன். நீங்கள் செய்ய எண்ணியதை செய்து காட்டுவேன்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: எந்தவொரு சூழலையும் எதிர்கொண்டு வாழ கற்றுக்கொடுத்து, கண்டிப்புடனும், அன்பார்ந்த தோழனாகவும் நல்வழிப்படுத்தும் ஆசானாகவும் இருந்து, தன் உயிர்மூச்சு உள்ளவரை நம்மை தோளிலும், மனதிலும் சுமக்கும் தந்தையரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றி வணங்குகிறேன். அனைத்து தந்தையருக்கும் உலக தந்தையர் தின நல்வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஆயிரம் ஆயிரம் அதிர்வுகளையும், பூகம்பங்களையும் தாங்கிக் கொண்டு, விதைகளில் இருந்து துளிர்களை எடுத்து வளர வைக்கும் பூமியைப்போல, தங்கள் வாழ்வின் துயரங்களையும், இடிகளையும் மனதுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு, தம் பிள்ளைகளின் வெற்றிக்காகவும், உயர்வுக்காகவும் உழைப்பவர்கள்தான் தந்தையர்கள். அவர்கள் ஒளிரும் ஆடைகளையும், மின்னும் நகைகளையும் அணியத் தெரியாத, மிரட்டலுடன் கூடிய அரவணைப்பை மட்டுமே தரத் தெரிந்த ஆண் தேவதைகள். அவர்களை போற்றுங்கள். அவர்களை முன்னோடியாக கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு வளமாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in