

சென்னை: காய்ச்சல், சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 27 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளை மத்திய, மாநில அரசுகளின் மருந்து தரக் கட்டுப் பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. ஆய்வின் போது, போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,302 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில்,காய்ச்சல், சர்க்கரை நோய், இரும்புச் சத்து, உயர் ரத்த அழுத்தம், கிருமித் தொற்று பாதிப்பு, ஜீரணமண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 27 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.
இணையதளத்தில் விவரம்: பெரும்பாலான மருந்துகள் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், தெலங்கானா மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை ஆகும். அதேபோல், மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுப்பதற்கான ரத்தஅடர்த்தியை குறைக்கும் ஹெபாரின் மருந்தில் ஒன்று போலியாக இருந்தது தெரியவந்தது அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.