Published : 21 Oct 2017 08:20 AM
Last Updated : 21 Oct 2017 08:20 AM

ஜிஎஸ்டி காட்சி நீக்கம் குறித்து படக்குழுவினர் ஆலோசனை: ‘மெர்சல்’ படத்தில் சர்ச்சை வசனங்கள் இல்லை - மண்டல தணிக்கை குழு அதிகாரி தகவல்

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகளை நீக்கு வது குறித்து படக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகியுள்ள ‘மெர்சல்’ திரைப்படத்தில், ஜிஎஸ்டி வரி, டிஜிட்டல் இந்தியா திட்டம் மற்றும் மருத்துவ வசதி குறைபாடு தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசுக்கு எதிராக உள்ள இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில், படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவும் பெருகி வருகிறது.

ஜிஎஸ்டி காட்சி நீக்கமா?

இதற்கிடையில், பாஜக தரப் பில் எதிர்ப்பு அதிகரிப்பதால், ஜிஎஸ்டி தொடர்பான காட்சியை நீக்கலாமா என்று படத்தின் தயாரிப்பாளர் தரப்பினரும், படக்குழுவினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி விசாரித்ததற்கு, ‘‘மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி வரி தொடர்பான காட்சிகளை நீக்குவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம். சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கலாமா அல்லது சர்ச்சைக்குரிய காட்சியின் ஒலியை மட்டும் (மியூட்) நீக்கலாமா என்று ஆலோசித்து வருகிறோம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருக்கும்’’ என்று படக் குழுவினர் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் பற்றி மண்டல தணிக்கை குழு அதிகாரி மதியழகன் கூறியபோது, ‘‘மெர்சல் படத்தில் யாரையும் பாதிக்கிற வகையிலோ, சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலோ வசனங்கள் இல்லை. கருத்துரிமை அடிப்படையிலேயே ஜிஎஸ்டி வரி தொடர்பான காட்சிகள் உள்ளன. படத்தில் இக்காட்சிகளை நீக்க வேண்டும் என்றால், தணிக்கை குழுவிடம் மீண்டும் அனுமதி பெற வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x