Published : 23 Oct 2017 09:53 AM
Last Updated : 23 Oct 2017 09:53 AM
காய்ச்சல் குணமாவதற்காக சிறுமிக்கு சூடு வைத்து பாட்டி, வைத்தியம் பார்த்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் என்.கண்டிகை பகுதி யைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி ஜோப்பினா பிரின்சி. சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த பாட்டி, காய்ச்சல் குறைய சூடுகொட்டையை கொண்டு சிறுமியின் நெற்றியில் சூடு வைத்துள்ளார். காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுமிக்கு நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுமி சிகிச்சைக்காக பெற்றோர் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் ஆய்வு செய்ய வந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இந்தத் தகவலை கேள்விப்பட்டு சிறுமியைப் பார்த்து நலம் விசாரித்தார். சிறுமிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். சிறுமி யின் உறவினர்களிடமும் இதுபோன்ற வைத்தியம் செய்யக் கூடாது என அறிவுறுத்தினார். காய்ச்சல் என்றால் சூடு வைத்தல் போன்ற பாட்டி வைத்தியம், சுய மருத்துவ முறையை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT