மதுரை கிரானைட் ஊழல்: ரூ. 517 கோடி அசையா சொத்துகள் பறிமுதல்

மதுரை கிரானைட் ஊழல்: ரூ. 517 கோடி அசையா சொத்துகள் பறிமுதல்
Updated on
1 min read

மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு வழக்கில் எம்.ஆர் கிரானைட் மற்றும் ஆர்.ஆர் கிரானைட் உரிமையாளர்களின் 517 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர், கீழவளவு, மேல வளவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்வேறு நிறுவனங்கள் மீது புகார்கள் கூறப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து மேலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு, அரசுக்கு ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் முறைகேடு நடந்ததாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

கிரானைட் முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது பற்றி அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வந்தது. இதில், அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கோரி அமைத்து, கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதை அமலாக்கத் துறை உறுதி செய்தது. இதன் மூலம் பல கோடி ரூபாய் அளவிற்கு பண பரிமாற்றம் நடந்ததையும் உறுதி செய்தது. முதல்கட்டமாக 450 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோதமாக பணம் ஈட்டியதையும் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் கிரானைட் வழக்கில், எம்.ஆர் கிரானைட் மற்றும் ஆர்.ஆர் கிரானைட் உரிமையாளர்களின் 517 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத் துறை இன்று பறிமுதல் செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in