Published : 07 Oct 2017 02:09 PM
Last Updated : 07 Oct 2017 02:09 PM

போயஸ் இல்லத்தை அரசு இல்லம் ஆக்க தடை விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் ஜெ.தீபா வழக்கு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டம் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்கக் கோரி ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்து இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என, தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக்கி அதன் வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தது.

அப்போதே இந்த அறிவிப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஏதிர்த்தார். இந்நிலையில் போயஸ் இல்லத்தை அரசுடமையாக்கும் முடிவை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் மனுவில் தங்கள் பாட்டி சந்தியா, போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லம் உள்ளிட்ட பல சொத்துகளை வாங்கினார். அந்த வீட்டில் அத்தை ஜெயலலிதா, தனது தந்தை ஜெயகுமார் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்ததாகவும், பின்னர் தி.நகருக்கு குடி பெயர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

தற்போது தனது அத்தை ஜெயலலிதா மறைந்துவிட்டார். அவர் எந்த உயிலும் எழுதி வைக்காத நிலையில், அந்த சொத்துகளுக்கு தானும், சகோதரர் தீபக்கும் தான் சட்டப்பூர்வ வாரிசு. தனியார் சொத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து அறிவிப்பு வெளியிட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வரின் அறிவிப்பின் அடிப்படையில், வருவாய்த் துறை, சுற்றுலாத்துறை அதிகாரிகள் அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பின் அடிப்படையில், போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும்.இது சம்பந்தமாக தான் அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 9 ஆம் தேதி நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x