Published : 09 Oct 2017 08:25 AM
Last Updated : 09 Oct 2017 08:25 AM

ஜிஎஸ்டி, டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று முதல் 93 லட்சம் லாரிகள் ஓடாது: சரக்கு போக்குவரத்து பாதிக்கும் அபாயம்

லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தம் இன்று தொடங்குகிறது. சுமார் 93 லட்சம் லாரிகள் நிறுத்தப்படுவதால் பட்டாசு, உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கத்தின் முக்கிய ஆலோசனை கூட்டம் கடந்த 4-ம் தேதி டெல்லியில் நடந்தது. இதில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கத் தலைவர் எஸ்.கே.மிட்டல் உட்பட பல்வேறு லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் புதிய லாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அகில இந்திய அளவில் அக்டோபர் 9, 10 தேதிகளில் லாரிகளை இயக்காமல் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் லாரி உரிமையாளர்களின் சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. இதற்கு தமிழகத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேநேரம், வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிட்டும் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த லாரி உரிமையாளர்களை மத்திய அரசு அழைக்கவில்லை. எனவே, அறிவித்தபடி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் இன்று காலை 6 மணி முதல் தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் ஆடை, உணவுப் பொருட்கள், பட்டாசு உள்ளிட்டவற்றை கொண்டுசெல்வது பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

93 லட்சம் லாரிகள் ஓடாது

இதுதொடர்பாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தெற்கு மண்டலத்தின் துணை தலைவர் பி.வி.சுப்பிரமணி கூறியதாவது: மத்திய அரசின் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளால் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜிஎஸ்டி வரி, டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணம் ஆகியவற்றால் லாரி உரிமையாளர்கள் தொழிலை நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை மாதம் ஒருமுறை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை மூடிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இதன்படி, நாடு முழுவதும் 93 லட்சம் லாரிகள் ஓடாது. சரக்குகள் கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்படும்.

தமிழகத்தில் மட்டுமே சுமார்ரூ.5 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்படும். எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால், அடுத்த கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.சுகுமார் கூறும்போது, ‘‘2 நாள் வேலைநிறுத்தம் 9-ம் தேதி (இன்று) காலை 6 மணிக்கு தொடங்கி 10-ம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு நிறைவடையும். பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டும் ஓடும். ஆனால், அரிசி, பருப்பு, சிமென்ட், பட்டாசு உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் இயங்காது.

மேலும், ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசின் சாலை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா இருக்கிறது. இதைக் கண்டித்தும் மேற்கண்ட 2 நாட்களில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இதில் வேன், ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட பலரும் கலந்துகொள்கின்றனர். அடிக்கடி உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணங்களால் காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளை இழுத்து மூட மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x