Published : 06 Oct 2017 06:14 PM
Last Updated : 06 Oct 2017 06:14 PM

தேசத் துரோக வழக்கு எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும்; புகழேந்தி வழக்கு: விசாரணைக்கு ஏற்றது உயர் நீதிமன்றம்

தன் மீது பதிவு செய்த தேசத் துரோக வழக்கை ரத்து செய்யக்கோரி டிடிவி தினகரன் அணியை சேர்ந்த புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

நீட் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதாக கூறி துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, வெற்றிவேல் உள்ளிட்ட 17 பேர் மீது சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்தனர். கே.ஆர்.எஸ். சரவணன் என்பவர் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில் பொய்யான புகாரில், தன் மீது பழி வாங்கும் நோக்கத்துடன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், துண்டுப் பிரசுரத்தில் தன்னுடைய படம் இடம்பெற்றதாலேயே தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா, தினகரன் படங்கள் நோட்டீஸில் உள்ளது போலதான் தனது புகைப்படமும் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து தனக்கு தெரியாது எனவும், அதை யார் அச்சிட்டனர் என்ற விவரமும் தெரியாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். எனவே உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட வழக்கில், மேல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும், எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x