1,161 வனத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப ரூ.10.81 கோடி தேவைப்படுவது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

1,161 வனத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப ரூ.10.81 கோடி தேவைப்படுவது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
Updated on
1 min read

சென்னை: வனத் துறையில் காலியாக உள்ள 1,161 பணியிடங்களை நிரப்ப ரூ.10 கோடியே 81 லட்சம் ஏன் தேவைப்படுகிறது என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வனத் துறையில் காலியாக உள்ள 1,161 பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பணியாளர்கள் தேர்வுக்கு ரூ.10 கோடியே 81 லட்சத்து 47 ஆயிரம் தேவைப்படுகிறது எனவும், அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “வனத்தை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. காலியிடங்களை நிரப்பாமல் இயற்கை எப்படி பாதுகாக்கப்படும்?” என கேள்வி எழுப்பினர்.

மேலும், “ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப 10 கோடியே 81 லட்சம் ரூபாய் ஏன் தேவைப்படுகிறது? விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுமே, அந்த தொகை எங்கு செல்கிறது? 1,161 பேரை தேர்வு செய்ய 10 கோடியே 81 லட்சம் ரூபாய் என்றால் ஒருவரைத் தேர்வு செய்ய 93 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்படுகிறதா?” என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

பின்னர், வனத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப 10 கோடியே 81 லட்சம் ரூபாய் ஏன் செலவாகிறது? தேர்வாணையம் உள்ளபோது அரசு ஒப்புதலை ஏன் பெற வேண்டும்? காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்பது குறித்த விவரங்களுடன் வனத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in