Published : 26 Oct 2017 02:36 PM
Last Updated : 26 Oct 2017 02:36 PM

செல்போன் டவரில் ஏறி இளைஞர் போராட்டம்: ஸ்டாலின், கமலுக்கு அழைப்பு; நீட்டுக்கு எதிரான பேஸ்புக் லைவ் பேச்சால் பரபரப்பு

 பட்டினப்பாக்கத்தில் செல்போன் டவரில் ஏறிய இளைஞர் நீட் தேர்வுக்கு எதிராக, அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு கோரிக்கை வைத்தார். ஸ்டாலின், கமல், காவல் ஆணையர் வரவேண்டும் நேரில் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரிடம் போலீஸார் சாமர்த்தியமாக பேசி கீழே இறக்கினர்.

சென்னை ராயபுரத்தை சேர்ந்த இளைஞர் ராக்கி என்பவர் இன்று காலை 5.40க்கு பட்டினப்பாக்கம் மாநில குற்ற ஆவணக் காப்பகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் செல்போன் டவர் மீது ஏறினார்.

அதிகாலை என்பதால் யாரும் கவனிக்கவில்லை. நேரம் செல்லச் செல்ல சாலையில் சென்றவர்கள் செல்போன் கோபுரம் மீது வாலிபர் ஒருவர் ஏறி நிற்பதைப் பார்த்து போலீஸாருக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இளைஞருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்தார். இதனிடையே தனது பேஸ்புக் மூலம் வாலிபர் ராக்கி நேரலை ஒளிபரப்பை செய்தார். அதை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

அவரது நேரலையில் தான் அனிதாவுக்காக போராட வந்ததாக கூறினார். அரசியல் பற்றிய அவரது பேச்சு நகைச்சுவையாகவும், ஆனால் சிந்திக்க தூண்டுவதாகவும் அமைந்திருந்தது. அனிதாவை பற்றி யாரும் பேசவில்லை, அனைவரும் மறந்துவிட்டார்கள், நீட் தேர்வே கூடாது என்று போராட்டம் நடத்த வேண்டும் என்று நேரலையில் பேசிய அவர் வைத்த கோரிக்கைகள் வேடிக்கையாக இருந்தது.

தனது போராட்டம் மாலை 6 மணி வரை நீடிக்கும் என்று கூறிய அவர் மு.க.ஸ்டாலின், கமல் உள்ளிட்டோர் வரவேண்டும், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வரவேண்டும் அவரிடம் வைக்கவேண்டிய கோரிக்கைகள் அதிகம் உள்ளது என்றார்.

நீட் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின், கமல் கூப்பிட்ட போது போனேன். இப்போது எனக்காக அவர்கள் வருவார்களா? எல்லோரும் அனிதாவை மறந்துவிட்டனர். விவசாயிகள் பிரச்சினையையும் அப்படித்தான் மறந்து விட்டார்கள் என்று கூறிய அந்த இளைஞர் அடுத்து மு.க.ஸ்டாலின் சமீப காலமாக நன்றாக பேசிவருகிறார். எனக்கு ஒன்று என்றால் அவர் விட மாட்டார் என்று கூறினார்.

பின்னர் மேலும் பேசிய அவர், ஜெயலலிதாவை எல்லோரும் மறந்து விட்டார்கள், தனி ஆளாக சாதித்தவர் ஜெயலலிதா அவர் மரணத்தில் உள்ள மர்மம் விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வி.கே.சசிகலா அனிதா மரணம் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை, சிறையில் அனிதாவிற்காக நீட்டை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்திருந்தால் மக்கள் மனதில் நின்றிருப்பார், தினகரனுக்கும் அது சாதகமாக அமைந்திருக்கும் என்று பேசிய இளைஞர் தன் காதலி பிரிந்து போனது பற்றியும் புலம்பினார்.

பின்னர் தனது கழுத்தில் நான்கு இடத்தில் பிளேடால் அறுத்துக் கொண்டார். போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் நீண்ட நேரம் சமாதானம் பேசி அந்த இளைஞரை பல மணி நேரத்திற்கு பின்னர் கீழே இறக்கினர். அவரது கழுத்தில் காயம் இருந்ததால் அவர் உடனடியாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

போலீஸார் அவர் மீது 305, 309, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் செல்போன் கோபுரம் மீது அனுமதியின்றி பேனர் கட்டியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவும் யோசித்து வருகிறார்கள்.

இது குறித்து மன நல ஆலோசகர் ஒருவரிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பாக கேட்டபோது, ''காதலித்த பெண் 6 மாத காலமாக விலகிச் சென்றதால் மன அழுத்தத்தில் இளைஞர் இருந்திருக்கலாம், மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பது இது போன்ற மன நிலையில் உள்ளவர்கள் எண்ணமாக இருக்கும், இதற்காக இவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளக்கூட தயங்க மாட்டார்கள். நல்ல வேலை இந்த இளைஞர் மனம் மாறி கீழே இறங்கிவிட்டார். இவருக்கு தேவை கவுன்சிலிங். நல்ல அரவணைப்பு. முடிந்தால் நல்ல வேலை அவருக்கு கிடைக்க உதவ வேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x