Published : 22 Oct 2017 11:44 AM
Last Updated : 22 Oct 2017 11:44 AM
‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பே வந்தாலும் பயமில்லை, நமக்கு மோடி இருக்கிறார். நாம் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை’ என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நேற்று முன்தினம் இரவு அதிமுக 46-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: வெற்றி சின்னம் இரட்டை இலைதான். இந்த சின்னம் எங்கு இருக்கிறதோ அதுதான் அதிமுக. அந்த சின்னம் நம்ம அணிக்குத் தான் கிடைக்கப்போகிறது. 50 மாவட்ட செயலாளர்களில் 46 மாவட்டச் செயலர்கள் இங்கே இருக்கிறார்கள். 50 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 46 பேரும், 98 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்களும், ஒன்றிய, நகர செயலாளர்களும் நம்மிடம்தான் இருக்கிறார்கள்.
அதைவிட டெல்லி நம்மிடம் இருக்கிறது. ஒபாமா, ட்ரம்ப் (அமெரிக்க முன்னாள் மற்றும் இன்னாள் அதிபர்கள்) என யார் வந்தாலும் பயமில்லை. நமக்கு பிரதமர் மோடி இருக்கிறார். பிரதமர் மோடி இருக்கிற வரை நமக்கு பயமே இல்லை. அதிமுகவுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை அவர் பார்த்துக்கொள்வார். நாம் கவலையேபட வேண்டாம்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெறுவோம். எங்களுடன் திமுக மோதினால் தவிடுபொடியாகிவிடும். ஸ்டாலின் ஜாதகத்தில் அவருக்கு முதல்வராகும் யோகம் கிடையாது. அவரது கட்சிக்கே அவர் தலைவர் ஆக முடியாமல் திணறுகிறார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதை திமுக எம்எல்ஏக்களே விரும்பவில்லை. அப்படியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தாலும், திமுக எம்எல்ஏக்கள் 40 பேர் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசை ஆதரிப்பார்கள் என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT