Published : 02 Oct 2017 01:34 PM
Last Updated : 02 Oct 2017 01:34 PM

திமுக ஆட்சியில் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காணப்படும்: ஸ்டாலின்

திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வு காணப்படும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உதகையில் இன்று செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

''சில்வர் ஓக் மரங்கள் திட்டத்தில் முறையாக டெண்டர் விடாமல், ஆட்சியில் உள்ள அமைச்சர்களும், அதிகாரிகளும் சிண்டிகேட் அமைத்து, கோடி கோடியாக கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் ஏற்கெனவே இந்தச் செய்தியை இங்குள்ள திமுக நிர்வாகிகள் என்னிடத்தில் தெரிவித்த உடனே அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டுள்ளேன். சட்டமன்றத்திலும் திமுக சார்பில் பிரச்சினை எழுப்பப்பட்டது. அதன்பிறகு, தற்காலிகமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டதாக தெரிய வந்தது.

இப்போது நடக்கும் ஆட்சியைப் பொறுத்தவரையில், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முறையாக, வெளிப்படையாக, வெள்ளையறிக்கை வெளியிடுவது இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, 110 விதியினைப் பயன்படுத்தி பல அறிவிப்புகளை எல்லாம் வெளியிட்டார். அதைப் பின்பற்றி இப்போதுள்ள அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோதும், பல அறிவிப்புகளை வெளியிட்டனர். ஆனால், அந்தத் திட்டங்கள் எந்த நிலையில் இருக்கின்றன, அதற்காக எத்தனை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, என்பதை எல்லாம் நாங்கள் தொடர்ந்து சட்டமன்றத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறோம். வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

விவசாயப் பெருங்குடி மக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்கிறார்கள். நியாயமாக, ஜூலை 12 ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது காலம் கடந்து இப்போது திறந்திருப்பதால் எந்தப் பலனுமில்லை. விவசாயிகள் வாங்கியிருக்கும் கடன்களை எல்லாம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். அய்யாகண்ணு தலைமையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசோ, மாநில அரசோ அவர்களை அழைத்துப் பேசி, ஒரு சுமுகமான முடிவைக் கொண்டு வரக்கூடத் தயாராக இல்லை. இது மிகவும் வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

திருப்பூர் பின்னலாடைத் தொழில் நசுங்கி போயுள்ளது. அதேபோல, தமிழக நெசவாளர்கள் இந்த ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். திமுகவின் ஆட்சி வரும்போது, நிச்சயமாக இதற்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, சுமுகமான சூழல் ஏற்படுத்தப்படும்.

பொறுப்பு ஆளுநர் இருந்தபோது என்ன கோரிக்கையை வலியுறுத்தினோமோ அதையே இப்போதும் வலியுறுத்துகிறோம். இங்குள்ள அரசியல் சூழ்நிலைகள் புதிய ஆளுநருக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். குறிப்பாக, இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வரும் 4 ஆம் தேதி அதில் கிடைக்கும் தீர்வினைப் பொறுத்து, அடுத்தகட்டமாக கவர்னரை சந்திக்க வேண்டுமா அல்லது அவரை சந்திக்காமலேயே ஒரு சுமுகமான சூழ்நிலை வருமா என்பதைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

அமைச்சர் ஜெயக்குமார் நடிகர்கள் ரஜினி – கமல் ஆகியோர் எம்.ஜி.ஆர். – சிவாஜி போல என்று ஒப்பிட்டு இருக்கிறார். அதே ஜெயக்குமார் ஓரிரு தினங்களுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்துப் பேசியிருக்கிறார். நேற்றைய தினம் இப்படிப் பேசியிருக்கிறார். அதிமுக அரசின் முதல்வர் எடப்பாடி தலைமையில் உள்ள அமைச்சர்கள் எல்லா விஷயத்திலும் மாறி மாறி எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்'' என்று ஸ்டாலின் கூறினார்.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x