Published : 27 Oct 2017 08:20 AM
Last Updated : 27 Oct 2017 08:20 AM

மணல் அள்ள சென்றவரை கொன்றதாக கூறி செங்கம் அருகே வன காப்பாளரை தாக்கி வாகனத்துக்கு தீ வைப்பு

செங்கம் அருகே மணல் அள்ளச் சென்ற கூலித் தொழிலாளியை அடித்துக் கொன்றதாகக் கூறி வனக் காப்பாளரை உறவினர்கள் தாக்கினர்.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்புழுதியூர் அம்பேத்கர் நகரில் வசித்தவர் திருமலை(35). இவர், சந்தகவுன்டன் புதூர் வனப் பகுதியில் உள்ள ஓடையில் மணல் அள்ள மாட்டு வண்டியில் நேற்று சென்றார். அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி வனப் பகுதிக்கு சென்றனர். அங்கு திருமலை இறந்து கிடந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மேல்புழுதியூர் வழியாகச் சென்ற வனக் காப்பாளர் தாண்டவராயனை தடுத்து கேள்வி எழுப்பினர். மேலும் திருமலையை அடித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறி தாண்டவராயனைத் தாக்கியுள்ளனர். அவரது இரு சக்கர வாகனத்தை தீயிட்டு எரித்தனர். செங்கம் போலீஸார் துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வனக் காப்பாளர் தாண்டவராயனை மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் என்று கூறினர்.

இதற்கிடையில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல் கண்காணிப்பாளர் பொன்னி பேச்சு நடத்தினார். அப்போது உறவினர்கள், ‘திருமலையை அடித்துக் கொலை செய்த வனக் காப்பாளர் தாண்டவராயன் உட்பட 5 பேரை கைது செய்ய வேண்டும்’ என்றனர். திருமலை மரணம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் கண்காணிப்பாளர் பொன்னி உறுதி அளித்தார். அதன்பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. திருமலையின் சடலம் மீட்கப்பட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து செங்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x