

தஞ்சாவூர்: பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்பிக்க, அங்குள்ள தமிழ்ச்சோலை அமைப்பு மற்றும் தஞ்சைதமிழ்ப் பல்கலைக்கழக தமிழ் வளர் மையம் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக்கழகப் பதிவாளர் சி.தியாகராஜன், தமிழ்ச்சோலை அமைப்பின் கல்வித் திட்ட அலுவலர் சிவஞானம் தனராஜா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பேசும்போது, ‘‘தமிழ் வளர் மையத்தின் ஒலி- ஒளி காட்சிக் கூடத்தின் வாயிலாக, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சங்க இலக்கியம், திருக்குறள், பேச்சுத் தமிழ் போன்றவற்றை மையப்படுத்தி, பிரான்ஸ் நாட்டுத் தமிழர்களுக்கான வகுப்புகள் நடத்தப்படும்’’ என்றார்.
பிரான்ஸில் தமிழக் கல்வி: தமிழ்ச்சோலை அமைப்பின் கல்வித் திட்ட அலுவலர் சிவஞானம் தனராஜா பேசும்போது, ‘‘பிரான்ஸ் கல்வித் திட்டத்தில் தமிழை இணைப்பதில் வெற்றி கண்டுள்ள தமிழ்ச்சோலை அமைப்பு, அடுத்தகட்டமாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையம் மூலம் தமிழ் சார்ந்த பல்வேறு படிப்புகளை இக்கல்வியாண்டிலேயே முன்னெடுக்க உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இளையாப்பிள்ளை, திட்டங்கள் பிரிவின் பொறுப்பு அலுவலர் செல்வி, பிரிவு அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ் வளர் மைய இயக்குநர் இரா.குறிஞ்சிவேந்தன் செய்திருந்தார்.