

திருவள்ளூர்: கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கலைப் புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
இதன்படி, 18 வயதுக்கு உட்பட்டவர் கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கலைவளர் மணி விருதும், 36 முதல் 50 வயது வரை கலைச் சுடர்மணி விருதும், 51 மதல் 65 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கலை நன்மணி விருதும், 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்படுகின்றன
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரத நாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம்,சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க் கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச் சிலம்பாட்டம், தெருக் கூத்து உள்ளிட்ட நாட்டுப் புறக்கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் கலைஞர்கள் உரிய சான்றுகளுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் - 631 502 என்ற வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு கலைப் பண்பாட்டுத் துறையை 044-27269148 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.