Published : 29 Oct 2017 11:04 AM
Last Updated : 29 Oct 2017 11:04 AM

கோவை மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் கரையில் ஐம்பொன் சிலைகள்: போலீஸ் விசாரணை

கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரத்தில் கிடந்த இரு ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆலாங்கொம்பு பகுதியில் நேற்று அதிகாலை பவானி ஆற்றில் குளிக்க மக்கள் சென்றனர். அப்போது ஆற்றின் கரையோரத்தில் ஆஞ்சநேயர் மற்றும் பிள்ளையார் என இரு சாமி சிலைகள் கிடப்பதை கண்டு சிறுமுகை போலீஸாருக்கும், ஆலங்கொம்பு கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சிலைகளை ஆய்வு செய்தனர்.

அதில், ஆஞ்சநேயர் சிலை ஒன்றேகால் அடி உயரத்திலும், மற்றொரு பிள்ளையார் சிலை அரை அடி உயரத்திலும் இருந்தன. ஐம்பொன்னால் ஆன இந்த சிலைகள் பழமையானவை எனக் கூறப்படுகிறது. கோயில்களில் இருந்து திருடப்பட்டு, ஆற்றின் கரையோரத்தில் போடப்பட்டதா அல்லது ஆற்றில் அடித்துவரப்பட்டு நீரின் வேகத்தில் கரை ஒதுங்கிய சிலைகளா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இரு சிலைகளும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவை குறித்து ஆய்வு நடத்த தொல்லியல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளதாக, வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர். சிலை கடத்தல் வழக்குகள் மீதான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்ட தனிப்படை போலீஸாரும் இந்த சிலைகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x