Published : 29 Oct 2017 09:20 AM
Last Updated : 29 Oct 2017 09:20 AM
மாணவர்களை உருவாக்குவதில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிக பங்கு உள்ளது என டெல்லியில் உள்ள ராமகிருஷ்ண சாரதா மிஷனைச் சேர்ந்த ப்ரவ்ராஜிகா திவ்யானந்த ப்ராணா தெரிவித்தார்.
சென்னையில் உள்ள ராமகிருஷ்ண மிஷன், மடத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்களுக்கான புத்துணர்வு நிகழ்ச்சி தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் சாரதா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 400 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
உணர்வுசார் நுண்ணறிவு
நிகழ்ச்சியில் சிறப்பு சொற்பொழிவு வழங்கிய ப்ரவ்ராஜிகா திவ்யானந்த ப்ராணா பேசியதாவது: இன்றைக்கு இளைஞர்களிடேயே நிலவும் பிரச்சினைகளுக்கு உணர்வுசார் நுண்ணறிவுதான் (Emotional intelligence) காரணம். எதிர்மறையான எண்ணங்கள், மன அழுத்தம் ஆகியவை அவர்களை பாதிக்கின்றன. அதனால்தான், மன உணர்வுகளை புரிந்துகொள்வது கல்வி முறையில் மிக முக்கியமானது என்றும், அதைவிட முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்றும் சகோதரி நிவேதிதா கூறினார். மாணவர்களின் மன உணர்வுகளை நாம் புரிந்துகொள்ளும்போது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.
மாணவர்களை உருவாக்குவதில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிக பங்கு உள்ளது. எனவேதான், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடக்கப் பள்ளி ஆசியர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். தொடக்க நிலையில்தான் குழந்தைகளின் மனதில் கருத்துகள் ஆழமாக பதிகின்றன.
தொடக்கப் பருவத்தில் மாணவர்களுக்கு நன்னெறிகளை சொல்லிக் கொடுக்கும்போது எதிர்காலத்தில் அவர்களுக்கு நாம் ஏதும் கூறத் தேவையில்லை. எனவே, சகோதரி நிவேதிதாவின் கருத்துகள், எண்ணங்களை எடுத்துக்கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
புத்துணர்வு நிகழ்ச்சி
நிகழ்ச்சி குறித்து சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் கூறும்போது, “சிறந்த ஆசிரியர்களை உருவாக்கினால் சிறந்த மாணவர்கள் தானாக உருவாகிவிடுவார்கள். எனவேதான், ஆசிரியர்களுக்கான புத்துணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், தேசப்பற்று, சேவை உணர்வுமிக்க மாணவர்களை உருவாக்குவது குறித்தும், சகோதரி நிவேதிதாவின் கல்வி சார்ந்த கருத்துகள் குறித்தும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT