Published : 03 Oct 2017 09:12 AM
Last Updated : 03 Oct 2017 09:12 AM

நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சென்னைக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. போதிய மழை இல்லாததாலும், ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீர் வராததாலும் இந்த ஏரிகள் வறண்டன. தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அண்மைக் காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஏரிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரி நீர்பிடிப்புப் பகுதிகளில் நேற்று முன்தினம் 135 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதையடுத்து ஏரிக்கு வினாடிக்கு 175 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் தற்போது 42 மில்லியன் கனஅடி (மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி) நீர்இருப்பு உள்ளது.

சோழவரம் ஏரிப் பகுதியில் 117 மில்லி மீட்டர் மழை பெய்ததால், ஏரிக்கு விநாடிக்கு 116 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 881 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 36 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

புழல் ஏரிப் பகுதியில் 127 மில்லி மீட்டர் மழை பெய்தது. ஏரிக்கு விநாடிக்கு 249 மில்லியன் கனஅடி தண்ணீர் வருகிறது. 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 135 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி நீர்பிடிப்புப் பகுதிகளில் 47 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஏரிக்கு விநாடிக்கு 271 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 221 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 057 மில்லியன் கனஅடி. இப்போது 434 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் ஏரிகளின் நீர் இருப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த 4 ஏரிகளிலும் கடந்தாண்டு அக்டோபர் 1-ம் தேதி 2 ஆயிரத்து 015 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x