Last Updated : 11 Jul, 2014 01:36 PM

 

Published : 11 Jul 2014 01:36 PM
Last Updated : 11 Jul 2014 01:36 PM

சிவாஜி, கமலை முந்திய நம்பியார்!- அந்தநாள் ஞாபகம்

எத்தனை படங்களில் ஒரு நட்சத்திரம் நடித்திருக்கிறார் என்பது எண்ணிக்கையில் நிகழ்த்தப்படும் சாதனை. அதைப் போலவே ஒரு படத்தில் ஒன்றுக்கு மேற்பட்டு எத்தனை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வித்தியாசம் காட்டி எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் முதல் சாதனையைப் படைத்தவர், தமிழ் ரசிகர்களின் நித்திரையிலும் பயமுறுத்திய முத்திரை வில்லன் எம்.என்.நம்பியார்.

ஆனால் இன்றைய தலைமுறை தமிழ் ரசிகர்களுக்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் நடித்ததும், அதேபோல் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்திருந்ததும்தான் நினைவுக்கு வரும். மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், அந்த நிறுவனத்தின் அதிபரும் இயக்குநருமான டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் 1950-ல் வெளியாகிப் பெரிய வெற்றிபெற்ற ‘திகம்பரச் சாமியார்’ படத்தில் 12 வேடங்களில் கலக்கினார் நம்பியார். 1934-ல் மும்பையில் படமாக்கப்பட்ட ‘ராமதாசு’ என்ற படத்தில் சிறிய வேடமொன்றில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி மெல்ல மெல்ல வளர்ந்து வந்த நம்பியாரை ஒரு முழுமையான வில்லன் நடிகராக அடையாளம் காட்டியது 1950-ல் வெளியான திகம்பரச் சாமியார்.

திகம்பரச் சாமியார் படத்தின் எழுத்தாளரான ‘வடுவூர் துரைசாமி ஐயங்கார்’ அன்று புகழ்பெற்ற துப்பறியும் நாவலாசிரியர். வடுவூரார் என்று வாசகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இவரது புகழ்பெற்ற துப்பறியும் நாவல்களில் ஒன்றுதான் திகம்பரச் சாமியாராக உருவானது.

வடிவாம்பாள் என்ற இளம்பெண்ணை (நாயகி) கும்பகோணம் வழக்கறிஞர் சட்டநாதம் பிள்ளை என்பவர் கடத்தி வந்து அடைத்து வைத்து, அவளது மனதை மாற்றித் தன் சகோதரர் மாசிலாமணிக்குக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கத் துடிக்கிறார். இப்போது கடத்தப்பட்ட வடிவாம்பாளை யார் கண்டுபிடித்து அவளது காதலனுடன் சேர்த்து வைப்பது? அவர்தான் திகம்பரச் சாமியார். பலவிதமான மாறுவேடங்களில் தோன்றி வடிவாம்பாளைச் சிறை வைத்திருக்கும் வீட்டைக் கண்டுபிடிக்கிறார்; காதலனோடு சேர்த்து வைக்கிறார்.

வடுவூரார் நாவலில் காட்டிய விறுவிறுப்பும் சுவையும் கொஞ்சமும் குன்றாமல் இருக்கத் தனது கதை இலாகாவைச் சேர்ந்த த. சண்முகம் என்பவரைத் திரைக்கதை எழுத வைத்து வெற்றிப்படமாக இயக்கிக்காட்டினார் டி.ஆர். சுந்தரம். நாவல்களைப் படமாக்கினால் வெற்றிபெற முடியாது என்ற மூடநம்பிக்கையை உடைத்துக் காட்டினார் மார்டன் அதிபர்.

திகம்பர சாமியாராக 12 வேடங்களில் தோன்றி ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தார் எம்.என். நம்பியார். முதலில் திகம்பர சாமியார் வேடத்தில் நடித்தவர் பழம்பெரும் நடிகரான காளி என் ரத்தினம். ஆனால் ஏதோ ஒன்று உதைத்துக் கொண்டே இருக்க, படத்தின் கால்பகுதி எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் ‘ரஷ்’ போட்டுப் பார்த்தார் சுந்தரம். ஆனால் “துப்பறியும் படத்துக்கான பயம் வரவில்லை” என்று கூறியவர் காளியை நீக்கிவிட்டு நம்பியாருக்கு மேக் அப் டெஸ்ட் எடுத்துப் பார்த்தார். முதலில் ஐந்து தோற்றங்களுக்கான மேக்-அப் டெஸ்ட் செய்து பார்த்தவர் நம்பியாரிடம் “உன்னை இனிமே பிடிக்க முடியாதுய்யா!” என்று அந்தப் படத்தில் நடிக்கத் தொடங்கும் முன்பே பாராட்டியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x