Published : 24 Oct 2017 03:10 PM
Last Updated : 24 Oct 2017 03:10 PM

மெரினாவில் காணாமல் போன நாய்: 105 நாட்களுக்குப் பின் ஜெர்மன் தம்பதியிடம் ஒப்படைப்பு

மெரினாவில் கடந்த ஜூலை மாதம் காணாமல் போன ஜெர்மன் தம்பதியின் நாய் கண்டுபிடிக்கப்பட்டு 105 நாட்களுக்குப் பிறகு தம்பதியிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. நெகிழ்ச்சியுடன் தங்கள் நாயை கட்டிக்கொண்ட அவர்கள் போலீஸாருக்கு நன்றி தெரிவித்தனர்.

கடந்த ஜூலை 8-ம் தேதி ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டீஃபன் கக்ராஹ் என்பவர் தன் மனைவி ஸ்டெஃபன் கஹேராவுடன் சுற்றுலாவுக்காகச் சென்னை வந்தார். தங்களுடன் தங்களது செல்ல வளர்ப்பு நாயான லாப்ரடார் வகையைச் சேர்ந்த கறுப்பு நிற லூக்கையும் அழைத்து வந்தனர்.

லூக் ஜெர்மன் தம்பதியின் செல்ல நாயாகும். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் லூக்கையும் தங்களுடனே அழைத்துச் செல்வார்கள். அண்டார்டிகா, அலாஸ்கா, அரேபியா என உலகம் முழுவதும் அவர்களுடன் லூக் சுற்றியுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஜெர்மன் தம்பதி பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்து சென்னை மெரினா கடற்கரைக்கு சுற்றிப் பார்க்க வந்தனர். மெரினா கடற்கரையில் தாங்கள் வந்த காரில் அமர்ந்திருந்த அவர்கள், லூக்கை வெளியே காரில் கட்டி வைத்திருந்தபோது யாரோ மர்ம நபர் நாயை அவிழ்த்து திருடிச் சென்று விட்டார்.

லூக் நாய் காணாமல் போனது குறித்து ஜெர்மன் தம்பதி, மெரினா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் லூக்கை தேடி வந்தனர். தங்கள் செல்லப் பிராணியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் தருவதாக அறிவித்துவிட்டு நேபாள் புறப்பட்டுச்சென்றனர்.

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி காணாமல் போன  லூக் நாய் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தகவல் ஜெர்மன் தம்பதிக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேபாளத்தில் இருந்ததால் இரண்டு நாளில் வருவதாக தெரிவித்திருந்தனர்.

இன்று காலை சென்னை வந்த ஜெர்மன் தம்பதி, தங்கள் நாயை பராமரித்து வரும் விலங்கின ஆர்வலர் விஜயா நாராயணன் வீட்டிற்குச் சென்றனர். அங்கு மயிலாப்பூர் துணை ஆணையரும் சென்றார். ஜெர்மன் தம்பதியைச் சந்தித்தவுடன் அவர்களது செல்லப் பிராணி லூக் துள்ளிக் குதித்து அவர்கள் மேல் தாவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. அவர்களும் தரையில் அமர்ந்து நாயை கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சிறிது நேரம் நாயையும் ஜெர்மன் தம்பதியினரும் பரிமாறிய அன்பை நெகிழ்ச்சியுடன்  வேடிக்கை பார்த்தனர். பின்னர் முறைப்படி காணாமல் போன நாய் ஜெர்மன் தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. மயிலாப்பூர் துணை ஆணையர் ஜெர்மன் தம்பதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

மகிழ்ச்சியுடன் காணப்பட்ட ஜெர்மன் தம்பதியினர் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். தாங்கள் சோர்ந்து போய் அவரைச் சந்தித்தபோது உங்கள் நாய் கட்டாயம் கண்டுபிடிக்கப்பட்டு உங்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார், இன்று அது நடந்து விட்டது என்று துணை ஆணையர் சரவணனிடம் அவர்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர். விலங்கின ஆர்வலர் விஜயா நாராயணனுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இரண்டு நாளில் மீண்டும் நேபாளம் செல்லும் அவர்கள் அங்கிருந்து மீண்டும் சில உலக நாடுகளுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.

நாய் கிடைத்தது எப்படி?

ஜெர்மனியில் தெரு ஒன்றில் லூக்கை சின்னக் குட்டியாக இருந்தபோது கண்டெடுத்ததாக தெரிவித்த ஜெர்மன் தம்பதியினர் லூக்கின் மார்பில் சிலுவைக்குறி இருக்கும் அதுதான் எங்களை கவர்ந்தது என்றனர்.

ஜெர்மனியில் வளர்ப்பு பிராணிகள் கழுத்திற்குள்ளே உரிமையாளர் பற்றிய விபரங்கள் அடங்கிய சிப் பொருத்தப்பட்டிருக்கும், அதன் மூலம் நாய் காணாமல் போனாலும் அதை வைத்து கண்டுபிடிக்கலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x