Published : 10 Oct 2017 06:35 AM
Last Updated : 10 Oct 2017 06:35 AM

நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி: ரூ.50 ஆயிரம் கோடி சரக்குகள் தேக்கம் - அரசுக்கு பெருமளவு வரி வருவாய் இழப்பு

நாடு முழுவதும் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியதால், சுமார் 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. ஆனால் பால், குடிநீர், காய்கறிகள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் வழக்கம்போல் ஓடின.

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து சங்கத்தின் ஆலோசனை கூட்டம் புதுடெல்லியில் நடந்தது. லாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு உள்ளிட்டவை கண்டித்து அக்டோபர் 9, 10-ம் தேதிகளில் 2 நாட்கள் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று காலை 6 மணி முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது.

இதனால் சரக்கு கொண்டு சென்ற லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நாடுமுழுவதும் சுமார் 70 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. இதேபோல், சரக்கு கொண்டு செல்ல முன்பதிவு செய்யும் அலுவலகங்களும் இழுத்து மூடப்பட்டன. இதனால் பருப்பு, மஞ்சள், முட்டை, பட்டாசு, ஆடைகள், கோழிகள், சிமெண்ட், மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்வது முடங்கியது.

அதேநேரம் பால், குடிநீர், காய்கறிகள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் வழக்கம் போல் ஓடின. இருப்பினும், லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தத்தை காரணம் காட்டி, வியாபாரிகள் சிலர் காய்களின் விலையை உயர்த்தி வசூலித்தனர். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

சரக்குகள் தேக்கம்

இது தொடர்பாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தெற்கு மண்டலத்தின் துணை தலைவர் பி.வி.சுப்பிரமணி கூறியதாவது: ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை மாதம் ஒரு முறை மட்டுமே நிர்ணயம் செய்ய வேண்டும். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை மூடிவிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களின் நாடுமுழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது.

பெரும்பாலான லாரிகள் ஓடாததால் சரக்குகள் கொண்டு செல்வது முடங்கியது. தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், சுமார் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால், அடுத்த கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.சுகுமார் கூறும்போது, ‘தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் 1.5 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழகத்தில் உள்ள 1,500 லாரி புக்கிங் அலுவலகங்களும் மூடப்பட்டன. இதனால் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. மேலும், தமிழக அரசுக்கு லாரிகள் மூலம் கிடைக்க வேண்டிய வரி வருவாய் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x