தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்

பைக் டாக்ஸி
பைக் டாக்ஸி
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தனியார் நிறுவனத்தின் மூலம் ‘பைக் டாக்ஸி’கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள், பகுதி நேர வேலை வேண்டுவோர், அவ்வப்போது பணம் தேவைப்படுபவர்கள் தங்கள் சொந்த இருசக்கர வாகனங்களை, தனியார் நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டு டாக்ஸியாக இயக்குகின்றனர்.

செல்போன் செயலி மூலம் நாம் செல்ல வேண்டிய இடத்தை பதிவு செய்தால், அந்த இடத்துக்கே வந்து அழைத்துச்சென்று, நாம் கூறும் இடத்தில் இறக்கிவிடுகின்றனர். பயணிகளைக் கவர கவர்ச்சிகர சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. ஆட்டோ, வாடகை கார்களைவிடவும் கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் பலர் பைக் டாக்ஸியை நாடத் தொடங்கியுள்ளனர். அதற்கேற்ப பைக் டாக்ஸிகளை இயக்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு பைக் டாக்ஸிக்கு தற்போது வரை அனுமதி அளிக்கவில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," சில விஷயங்களில் மத்திய அரசு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. பைக் என்பது தனி நபர் பயன்படுத்தும் வாகனம். வாடகைக்கு விடப்படும் வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை. பைக் டாக்ஸிகளை பயன்படுத்த கூடாது என்பது தமிழக அரசின் நிலை. காவல்துறை இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது." இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in