

சென்னை: சென்னையில் முதல் முறையாக 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குடியிருப்புகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 2.67 கோடி மின்நுகர்வோர் உள்ளனர். விவசாயத்துக்கு தேவைப்படும் 2,500 மெகாவாட் உட்பட மாநிலத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது கோடைகாலத்தில் 16 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும். குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட்டாக குறையும்.
தற்போது கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், வீடுகளில் ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே தினசரி மின்தேவை 18 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது.
இந்நிலையில், சென்னையில் நேற்று 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,"முதன்முறையாக சென்னையில் நேற்று (08/06/2023) 9.16 கோடி யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் 02/06/2023 அன்று 9.06 கோடி யூனிட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது.. சென்னையின் நேற்றைய மின் தேவை 3872 மெகாவாட் ஆகும். அது எவ்வித தடங்களுமின்றி பூர்த்தி செய்யப்பட்டது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.