திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் ரூ.18 கோடியில் ராக்கெட் ஏவுதளத்திற்கான கட்டுமானப் பணிகள்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் ரூ.18 கோடியில் ராக்கெட் ஏவுதளத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ டெண்டர் கோரி உள்ளது.

சொந்த நாட்டு செயற்கைகோள்களை மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைகோள்களையும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. பல நாடுகள் தொடர்ந்து செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோவை நாடி வருகின்றன.

இதன் காரணமாக இஸ்ரோவுக்கு கூடுதல் ராக்கெட் ஏவுதளம் தேவைப்படுகிறது. ஏற்கெனவே ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்தில் இருந்து இஸ்ரோ ராக்கெட்டுகளை ஏவி வருகிறது. தேவை அதிகரித்துள்ளதால் ஸ்ரீஹரிகோட்டாவை தாண்டி வேறு இடங்களிலும் ராக்கெட் ஏவுதளங்களை அமைக்க இஸ்ரோ முடிவு செய்தது. ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான உகந்த இடத்தை தேடும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இதில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதி பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக கண்டறியப்பட்டது. இதன்படி தற்போது, குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி முழுவதும் முடிந்து, சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ராக்கெட் ஏவுதள கட்டுமானத்திற்கான வரைபடம் தயார் நிலையில் உள்ளது. கட்டுமான பணிகளை துவங்கியதும், இரு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு,செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் தாலுகாக்களில் அமைந்துள்ள SSLV வளாகத்தில் இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது. இதன்படி, 18 கோடி செலவில் இந்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in