Published : 25 Oct 2017 11:59 AM
Last Updated : 25 Oct 2017 11:59 AM
காசிமேடு மீனவர்கள் வன்முறைக்கு திமுக, தினகரன் தரப்பு, காங்கிரஸ் மற்றும் விசிகவினரே காரணம் என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''சீன இன்ஜின் பிரச்சினையை மீனவர்களுக்குள் பேசித் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டத்துக்கு முந்தைய நாளில் சில படகுகளில் அவை கழற்றப்பட்டது.
எனினும் நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் வேண்டுமென்றே சாலை மறியல் நடத்தப்பட்டது. அப்போது காசிமேட்டில் திட்டமிட்டு வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்காக பணம் கொடுத்து ஆட்கள் அழைத்து வரப்பட்டனர்.
ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரூ.14 கோடி மதிப்பில் மீன் மார்க்கெட் கட்டித் தந்துள்ளார். ஆனால் அங்கு குறிப்பிட்ட சிலர் 1 நாளைக்கு ரூ.1 லட்சம் என்ற வீதத்தில் பணம் வசூலித்து வந்தனர். ரவுடிகள் மாமூல் பெறுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதை அடிப்படையாகக் கொண்டும் வன்முறைக்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் திமுக, தினகரன் தரப்பு, காங்கிரஸ், விசிக மற்றும் சமூக விரோதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் நடந்த வன்முறையின் பின்னால் உள்ளனர். குறிப்பாக திமுக வன்முறை தூண்டியதற்கான ஆதாரங்கள் உள்ளன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வண்டிகளில் ஸ்டாலின் படம் அச்சிடப்பட்டு இருந்தது.
ஆர்.கே.நகர் தேர்தலை முன்னிட்டு இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை மீறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் ஜெயக்குமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT