ஸ்ரீஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் மடத்தை நிர்வகிக்க 5 உறுப்பினர் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு

ஸ்ரீஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் மடத்தை நிர்வகிக்க 5 உறுப்பினர் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு
Updated on
1 min read

சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள தொண்டை மண்டல ஸ்ரீஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் மடத்தை நிர்வகிக்க ஆலோசனைக் குழுவை அமைத்து, அறநிலையத் துறை கடந்த1975-ம் ஆண்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவுப்படி முழுநேர செயல் அதிகாரிநியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் மடத்தை நிர்வகிக்க 5 உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைத்து கடந்த 1979-ம் ஆண்டு அறநிலையத் துறை ஆணையர் மற்றொரு உத்தரவை பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு சைவ வேளாளர் பேரவை நிறுவனத் தலைவர் பகவதி முத்து உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கியஅமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதீன மடாதிபதியை விட ஆலோசனைக் குழுவுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவு, அறநிலையத்துறை சட்டத்துக்கு விரோதமாக உள்ளதால், அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர்கள் அறநிலையத் துறை ஆணையரையே அணுகலாம் என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், அறநிலையத் துறை ஆணையரின் உத்தரவை எதிர்த்துஆணையரிடமே முறையிட சட்டத்தில் வழிவகை உள்ளது என்பதால் இது தொடர்பாக ஆணையரிடம் முறையிடலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in